अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः ।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ।। १८
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரண: |
அநாஸிநோ Sப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத || 18 ||
அநாஸிந: – அழிவற்ற; அப்ரமேயஸ்ய – விளக்க முடியாத; நித்யஸ்ய – நித்தியமான; சரீரண: – ஆத்மா; இமே – இந்த; தேஹா: – அனைத்து உடல்களும்; அந்தவந்த – அழியக்கூடியவையாக; உக்தா – கூறப்பட்டுள்ளன; தஸ்மாத் – ஆகவே; பாரத – பரதகுலதென்றலே! அர்ஜினா!; யுத்யஸ்வ – போர்புரிவாயாக.
‘யுத்யஸ்வ’ என்பதற்கு நேரடியான பொருள் ‘போர்புரிவாயாக’ என்பது தான் என்றாலும் ‘கீதை’ யில் எங்கெல்லாம் இந்த சொல் வருகிறதோ அவ்விட மெல்லாம் நாம் எடுத்து கொள்ள வேண்டியது ‘சுதர்மத்தை செய்’ அல்லது ;உனது கடமையை செய்’ என்ற பொருளை தான்.
விளக்கம்:
ஆத்மாவின் தத்துவத்தை பற்றி ‘பகவான்’ பேசி கொண்டு வருகிறார். இந்த ஸ்லோகத்தில் ஆத்மாவுக்கு இரண்டு லட்சணங்கள் கொடுக்கப்படுகின்றது. ஒன்று கூடஸ்த நித்யம், இரண்டாவது அப்ரமேயஹ. கூடஸ்த நித்யம் என்றால் மாறாத நித்யம். அப்ரமேயம் என்றால் அனுபவத்திற்கு வராது. இந்த ஆத்மாவை இந்திரீயங்களால் பார்க்க முடியாது. இந்திரிய, மன, வாக் அகோசரம் அதாவது இந்திரீயங்களாலும், மனதாலும் அதை அனுபவிக்க முடியாது, வாக்காலும் அதை விளக்க முடியாது. அப்ரமேயம் என்பதற்கு இனியொரு அர்த்தம் அளக்க முடியாதது. இந்த ஆத்மாவை எதனாலும் அளக்க முடியாது காரணம் இதற்கு எல்லை கிடையாது.
கூடஸ்த நித்யம் என்றால் மாறாது உள்ளது என்று பார்த்தோம். இங்கு நித்யம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று கூடஸ்த நித்யம், இனியொன்று பிரவாக நித்யம். பிரவாக நித்யம் என்றால் மாறி கொண்டே இருந்து கொண்டிருக்கும். கூடஸ்த நித்யம் என்றால் மாறாமல் இருந்து கொண்டே இருக்கும். உதாரணம் பார்த்தால் நமக்கு புரியும். ஆற்றினுடைய கரை யோரத்தில் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஆற்றினுடைய நீரானது ஓடி கொண்டே இருக்கிறது. ஒரு நொடியில் பார்த்த நீர் வேறு அடுத்த நொடியில் பார்க்கும் நீர் வேறு ஆனால் அந்த நீரோட்டம் ஓட்டமாக இருக்கும் பொழுது அது இருந்து கொண்டே இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் நொடியில் நீர் மாறிக் கொண்டே இருக்கிறது இந்த நீரோட்டம் பிரவாக நித்யம் என்று சொல்லப்படுகிறது. இதுபோல் இந்த ஜகத்தும் பிரவாக நித்யம். இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒரு காலத்தில் பிரளயத்தில் ஒடுங்கி இருக்கும் இந்த ஒடுக்கத் திற்கு பின் சிருஷடியில் இந்த பிரபஞ்சம் மீண்டும் வெளி தோற்றத்திற்கு வரும் இப்படியே இந்த ஜகத்தும் ‘பிரவாக நித்திய’மாக இருக்கிறது. இதே தன்மை ஆத்மாவிற்கும் உண்டா என்றால் இந்த ஆத்மா அப்படி பட்ட நித்யம் இல்லை, ஆத்மா கூடஸ்த நித்யம் மாறாமல் எப்பொழும் இருந்து கொண்டிருக்கும் நித்யம். ஆகவே மாறிக்கொண்டிருப்பது இந்த ஜகத் அல்லது மாயை. மாறாமல் என்றும் இருப்பது இந்த ஆத்மா.
No classes added yet.






Users Today : 6