अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ॥ २६ ॥
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் |
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஸோசிதுமர்ஹஸி || 26 ||
அத ச – ஆயினும்; த்வம் – நீ; ஏநம் – இந்த ஆத்மாவை;
நித்யஜாதம் – எப்பொழுதும் பிறந்து கொண்டேயிருப்பவன்;
வா – அவ்வாறே; நித்யம் – எப்பொழுதும்;
ம்ருதம் – இறந்து கொண்டே இருப்பவன்; மந்யஸே – கருதினால்;
ததாபி – அப்படியானாலும் கூட;
மஹாபாஹோ – நீண்ட கைகளை உடையவனே;
ஏவம் – இவ்வாறு; ஸோசிதம் – வருத்தப்படுவது; ந அர்ஹஸி – நன்றன்று.
ஆயினும் இந்த ஆத்மாவை எப்பொழுதும் பிறந்து கொண்டேயிருப்பவன், அவ்வாறே எப்பொழுதும் இறந்து கொண்டே இருப்பவன் என்று கருதினாலும் கூட நீண்ட கைகளை உடையவனே! நீ இவ்வாறு வருத்தப்படுவது உசிதம் அல்ல.
விளக்கம்: பகவானுடைய தற்போதைய விருப்பம் அர்ஜீனனுடைய மனதில் தன்னுடைய சோகத்திற்கு காரணம் என்ன என்று எதை நினைக்கிறானோ அது தவறு என்று புரிய வைப்பது தான். ஒருவர் நம்மிடம் வந்து அவருடைய சோகத்தையும் அதற்கான சூழ்நிலையும் நம்மிடம் கூறி வருத்தபடுகிறார் என்றால் அவருடைய சோகத்தையும் சூழ்நிலையும் நாம் புரிந்துக் கொண்டு அவருடைய சோகத்தின் காரணத்தை கண்டுபிடித்து அந்த காரணத்தினால் சோகப்பட வேண்டிய தேவையில்லை என்று அறிவு பூர்வமாக அவரை புரிய வைத்து அவருடைய சோகத்தை நீக்க முயற்சி செய்ய வேண்டும். இதை தான் பகவான் இந்த ஸ்லோகத்தில் செய்கிறார். பகவான் இதை தன் தரப்பி லிருந்து கூறவில்லை. அர்ஜுனன் தரப்பிலிருந்து கூறுகிறார். அர்ஜுனன் நினைக்கலாம் இந்த ஆத்மா நித்யம் என்று சாஸ்திரம் தான் கூறுகிறது. இந்த ஆத்மா வந்து பிறக்கிறது. சரீரம் தோன்றும் போது ஆத்மாவும் பிறக்கிறது, இந்த சரீரம் அழியும் போது இந்த ஆத்மாவும் அழிந்து விடுகிறது என்று ஏன் எடுத்துக் கொள்ள கூடாது என்று அர்ஜுனன் நினைப்பதாகவே பகவான் கற்பனை செய்து அர்ஜுனா! இந்த ஆத்மா நித்தியம் என்பதனால் உன்னை துயரப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனாலும் இந்த ஆத்மா உடலுடன் சேர்ந்து ஒவ்வொரு முறையும் பிறக்கிறது, ஒவ்வொரு முறையும் இறக்கிறது என்று நினைத்தாலும் கூட அதைக் குறித்து நீ வருந்த கூடாது என்று கூறுகிறார். இப்படிபட்ட வாதத்திற்கு சமஸ்கிருதத்தில் “அப்யூபேத்ய வாதம்” என்று பெயர். அப்யூபேத்யவாதம் என்றால் நிச்சயமாக நடக்காததை நடக்கிறது என்று ஏற்று கொள்வது அப்படியென்றால் ஒருவனுடைய மனநிலைக்கு ஏற்ப நடக்காத ஒன்றை தற்காலிகமாக ஏற்று கொள்வது. அப்படி ஆத்மாவை அழிவதாக இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். இதுவரை சிகர உச்சியிலிருந்து பேசிவந்த பகவான் கீழிறங்கி அர்ஜுனனை தேற்றுவதற்காக அவன் வழியிலேயே சென்று ஆறுதலளிக்க இந்த ரீதியில் பேசுகிறார். பகவான் கூறுகிறார் ஒரு சூழ்நிலையில் ஒரு சம்பவம் நிச்சயமாக நடக்கும் என்றால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ளுதல் (acceptance) என்ற பண்பை (value-வை) பற்றி அடுத்த சில ஸ்லோகங்களில் பேச போகிறார். அதை சொல்வதற்காக இவ்விதம் பேசுகிறார். இந்த ஸ்லோகங்களை படிக்கும் போது பகவானின் பாவனை களை புரிந்துக் கொள்ள வேண்டும். அர்ஜுனனுடைய மனதில் துயரமாக எதை நினைக்கிறானோ அது இல்லை என்று புரிய வைக்க வேண்டும். துரோணர், பீஷ்மர் இவர்களின் அழிவு துயரத்திற்கு காரணம் என்று நினைக்கின்றான், பகவான் சொல்கிறார் முதலில் அவர்கள் அழிய மாட்டார்கள். அவர்கள் அழிவதாக வைத்து கொண்டாலும் மாற்ற முடியாத விஷயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர ஏற்று கொள்ளாமையானது அந்த சூழ்நிலையை மாற்ற போவதில்லை. துயரம் என்பது ஒரு மார்க்கம் அல்ல என்பதை பகவான் நிச்சயம் செய்கிறார்.
No classes added yet.






Users Today : 4